தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
73. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கலா மாடியில் இருந்து திரும்பி வந்த சில நிமிடங்களிலேயே கீதாவும், ராஜீவும் வந்து சேர்ந்தார்கள். எப்போதும் போல் புன்னகையோடு வந்த கீதாவை பார்த்து இந்து கேலியாக கண் சிமிட்டவும், அவள் தோழியின் தலையில் செல்லமாக கொட்டினாள்.
பின் அனைவரும் ஒன்றாக கதைப் பேசி, சிரித்தப் படி காலை உணவு உண்டனர். ராஜீவ் இந்துவின் சமையலை கிண்டல் செய்து சிரிக்கவும், அடுத்த வினாடி காஞ்சனா தொடங்கி அனைவரும் இந்துவின் சப்போர்ட்டிற்கு வந்தார்கள். ராஜீவ் ஆச்சர்யத்தில் வாய் பிளப்பது போல் பாவனை செய்ய,
"வுமன் பவர்..." என்று பெருமை பீற்றினாள் இந்து.
இப்படி கலகலப்பாக இருந்த சூழ்நிலைக்கு நடுவில்,
"கீதா இன்னைக்கு கிர்த்திகை. சாயங்காலம் முருகன் கோவிலுக்கு போலாமா?" என மூத்த மருமகளை பார்த்துக் கேட்டாள் காஞ்சனா.
உடனேயே சரி என்று ஒப்புக் கொண்ட கீதா, சில வினாடிகளுக்குப் பின் கணவன் பக்கம் பார்வையை செலுத்தினாள். ராஜீவ் முகத்தை திருப்பிக் கொள்ளவும், கீதாவின் முகத்தில் மெல்லிய மாற்றம் ஏற்பட்டது. ஆனால் எல்லாம் ஒரு சில வினாடிகள் தான்... அதற்குள் கண்மணி எதையோ கேட்கவும், கீதா அவள் பக்கம் திரும்பி பேசலானாள்.
அன்று சஞ்சீவ் அங்கே இல்லாததால் தன் கவனம் முழுவதையும் தன் பிரிய அக்காவின் மீது வைத்திருந்த இந்து அங்கே நடந்த அந்த பார்வை பரிமாற்றத்தையும், முக மாறுதல்களையும் கவனிக்க தவறவில்லை. அதை பற்றி அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை!!!
ராஜீவ் அலுவலகம் கிளம்பிச் சென்றப் பிறகு, பெண்கள் தங்கள் பேச்சுக்களை மேலும் சில நிமிடங்கள் தொடர்ந்தார்கள். பின், காஞ்சனா தொலைக்காட்சி பக்கமும், கலா, கண்மணி புத்தகம் பக்கமும், கீதா தன் அறைப் பக்கமும் சென்றார்கள். இது தான் சரியான சமயம் என்று முடிவு செய்த இந்து, தன் மொபைலை எடுத்துப் பேசினாள். பின் காஞ்சனாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.