தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 11 - சசிரேகா
காலையில் விடிந்ததும் கீர்த்தனா சந்தோஷமாக வீட்டு வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள். 8 மணிக்கு தாஸ் வந்து பெல்லை அடிக்க அந்த சத்தம் கேட்டு எழுந்தாள் சரண்யா. பக்கத்தில் தாமரை பாட்டி இல்லாமல் போகவே மணியை பார்த்தாள். 8 மணி என இருக்கவே
”எட்டுதான் ஆச்சா” என சொல்லிக் கொண்டே மறுபடியும் படுத்து உறங்கலானாள்.
பெல் சத்தம் கேட்டு எழுந்த தேவநாதனோ வாசலுக்கு வந்து கதவை திறக்க தாஸ் உள்ளே வந்தான். குளித்து ரெடியாகி பளிச்சென வந்த தாஸ் முன்னாடி எந்நேரத்திலும் அவிழ்ந்துவிடும் என்ற அளவுக்கு அரை குறையாக கட்டியிருந்த வேட்டியுடன் வெற்று மார்புடன் நின்று கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த தேவாவை கண்டு தலையில் அடித்துக் கொண்டார் தாமரை
”தேவா என்ன இது கோலம்” என கேட்க அவனோ சிரித்தபடியே தாஸிடம்
”குளிச்சிட்டு வரேன், வீட்டுக்கு தேவையானது என்ன ஏதுன்னு கேட்டு வாங்கிட்டு வா கோயிலுக்கு போலாம்” என சொல்லிவிட்டு தாமரையிடம்
”கீர்த்தனா எங்க தாமரை”
“எதுக்கு கேட்கற அவள் டிபன் செஞ்சிக்கிட்டு இருக்கா”
“இல்லை கோயிலுக்கு போறேன் அதான் அவளையும் கூட்டிட்டுப் போலாம்னு”
“நானும் அவளும் காலையிலயே கோயிலுக்குப் போய்ட்டு காய்கறி வாங்கி வந்தாச்சி, நீ போய் ரெடியாகு” என சொல்ல அவனும் சரியென சொல்ல தாஸ் பாட்டியிடம் சென்றான், அவனை வைத்து பாட்டி இட்லி மாவு அரைக்க ஆரம்பித்தாள். தாஸ் கல்லை சுழட்ட தாமரையோ மாவை தள்ளி தள்ளி விட்டுக் கொண்டு
”வீட்ல இருந்து வர்றியே வைத்தி என்ன செய்றாரு” என கேட்க அவனோ முறைத்தான்