தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 04 - சசிரேகா
தாஸ் தந்த லெட்டரால் மனம் பாதித்த தேவநாதன் அமைதியாக அமர்ந்து விட்டான். என்ன செய்வது என புரியாமல் தவித்தான். அவனது முகத்தை வைத்தே புரிந்துக் கொண்ட தாஸோ அவனது கையை உலுக்கி கவலைப்படாத என சைகை செய்ய
”எப்படி கவலைப்படாம இருக்க முடியும் ஒரே சுத்தலா இருக்கு, ஏற்கனவே என் வீட்ல சரண்யா இருக்கா அவளை பாட்டி கல்யாணம் வரைக்கும் பேசியிருக்காங்க. இங்க பவி வேற என்னை ஆசைப்படறாள்ன்னு நீ சொல்ற ஆனா, நான் பவியை என் தங்கச்சியாதான் பார்க்கறேன் அது உனக்குத் தெரியும்ல” என கேட்க தாஸ் ஆம் என தலையாட்டவும் தேவா அடுத்து விக்ரமை பற்றி நினைக்கலானான்
”இந்த விக்ரமை நினைச்சாதான் கஷ்டமாயிருக்கு, முன்னயே அவன் வேலையில்லாம சுத்திக்கிட்டிருந்தப்ப தற்கொலை வரைக்கும் போனான். ஆத்துல விழுந்து குதிக்கிறேன், குளத்துல விழுந்து சாகறேன்னு சொல்லவும் அந்நேரம் ஒர்க்ஷாப் வைக்கலாம்னு யோசிச்சப்ப டக்குன்னு விக்ரமை நினைச்சி உடனே ஒர்க்ஷாப் வைச்சி அவனுக்கு வேலையும் கொடுத்தேன். அவனும் உடனே மனசு மாறி ஒழுங்கா வேலை பார்க்க ஆரம்பிச்சான். எதுக்குடா தற்கொலை வரைக்கும் போனேன்னு கேட்டா நான் ஆசைப்பட்டது கிடைக்கலையே, அப்பா அம்மா இல்லை, தங்கச்சி மட்டும்தான் அவளை நல்லபடியா படிக்க வைக்கனும், கல்யாணம் செஞ்சி வைக்கனும்னு ஆசைப்பட்டேன்.
அப்படியே நானும் படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி பெரிய பேக்டரியில வேலை செஞ்சி கைநிறைய சம்பாதிக்கனும், நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகனும்னு இவ்ளோ ஆசைகள் இருக்கு, இதுல எனக்கு வேலையே கிடைக்கலைன்னா என்னையே நம்பி இருக்கற தங்கச்சி வாழ்க்கையை எப்படி என்னால மேம்படுத்த முடியும், அதான் நான் தற்கொலை பண்ணிட்டா என் பேர்ல என் அப்பா போட்ட இன்சூரன்ஸ் பணம் தங்கச்சிக்கு பயன்படும்னு நினைச்சேன். என்னோட ஆசை ஒண்ணு நிறைவேறலைன்னாலும் தப்பு வெளிய இல்லை என்கிட்டதான் இருக்குன்னு தோணுது என்னால தோல்விகளை ஏத்துக்க முடியலை. கஷ்டமாயிருக்குனு அன்னிக்கு சொன்னான். இப்ப கீர்த்தனா விசயத்தில இவன் இப்படி முடிவு எடுத்து வைச்சிருக்கானே” என தேவா சொல்ல தாஸோ தேவாவிடம் சைகை செய்தான்