தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 01 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சூரியனின் ஒளி முகத்தின் மேல் வந்து விழவும், அந்த வெப்பத்தில் கண் விழித்தாள் ப்ரியா. அன்று ஞாயிறு என்பதால் அவசரமாக எழுந்து பள்ளி செல்ல வேண்டிய அவசியமில்லை. கண்களை சுழற்றி பார்த்தவள், அவளுடன் தங்கி இருக்கும் சாதனா ஜாகிங் முடித்து வந்து அதே ஜாகிங் உடையுடன் பேப்பர் படித்து கொண்டிருப்பதை கவனித்தாள். சப் இன்ஸ்பெக்டராக பணி புரியும் சாதனாவிற்கு வார நாட்கள் வார இறுதி நாட்கள் என்று பேதம் எதுவும் இல்லை.
சென்னையில் புகழ்பெற்ற ஒரு தனியார் பள்ளியில் உயர்நிலை கணித ஆசிரியையாக பணி புரியும் இருபத்தியேழு வயதான ப்ரியாவிற்கு பார்த்த உடனே மனதில் பதியும் பளிச்சென்ற முகம்... எப்போதும் அவள் இதழ்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த புன்னகை தானாகவே மற்றவர் முகத்திலும் ஒரு புன்னகையை வரவழைக்கும்... ஆனால் ரோஜா பூவின் மீது மெல்லிய திரையை போட்டு மறைத்ததுப் போல், அவளின் அழகிய முகத்திலும் ஏதோ ஒருவிதமான திரை இருந்தது...
படுக்கையில் இருந்து ப்ரியா எழுந்திருக்கும் அரவம் கேட்டு திரும்பிய சாதனா,
“குட் மார்னிங் ப்ரியா...” என்றாள்.
பதிலுக்கு புன்னகை மட்டும் புரிந்த ப்ரியா வேறு எதுவும் சொல்லாது அமைதியாக பாத்ரூம் நோக்கி சென்றாள்.
சாதனாவின் முகத்திலும் புன்னகை தோன்றியது. ப்ரியா எப்போதும் இப்படி தான்... ஒரு புரியாத புதிர்!
அரசு வேலையில் இருந்து ஒய்வு பெற்ற தம்பதியினர், சென்னை முகப்பேர் அருகே இருந்த தங்களின் வீட்டை நான்குப் பிரிவுகளாக பிரித்து வாடகைக்கு விட்டிருந்தனர்... ஒரு போர்ஷனில் அவர்கள் இருக்க, மற்ற மூன்று போர்ஷனிலும், சாதனா, ப்ரியா போல் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கி இருந்தனர். ஹாஸ்டலும், ஷேர்ட் அக்கமடேஷனும் கலந்து உருவான இந்த இருப்பிடம் அவர்களைப் போல் தனியே பணி புரியும் பெண்களுக்கு வர பிரசாதமாக இருந்தது.