தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 14 - மது
இரவு வானம். மினுக் மினுக் என மின்னும் நட்சத்திரம். மேகத்தோழிகளோடு ஓடிப்பிடித்து கண்ணாமூச்சி ஆடும் வெண்ணிலவு. அதைக் கண்டு ஆர்பரிக்கும் கடல் அலை.
இந்த ஏகாந்த சுகந்தத்தில் தேன்மொழி திளைத்து இருந்தாள்.
சில மணி நேரம் முன் கடல் கொந்தளிப்பில் செத்துப் பிழைத்து உயிரில்லா ஓர் சிறு தீவில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் ஏதுமின்றி ஆச்சரிய விழிகளோடு ரசித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவளது ஆனந்தம் வெகு நேரம் நீடிக்கவில்லை.
தனது டைவிங் சூட்டை கழற்றி தனியாக வைத்திருந்தவள் மிக மெலிதான ஆடையையே அணிந்திருந்தாள்.
காற்று குளிரை கட்டிப் பிடித்துக் கொண்டு அலைகளில் மிதந்து அவள் மேனியைத் தழுவ நடுநடுங்கிப் போனாள்.
எப்படியாவது நெருப்பு மூட்ட வேண்டும். ஆனால் நெருப்பு பற்றிக் கொள்ள இங்கே எந்த காய்ந்த சருகோ இல்லை மரமோ இல்லையே. வெறும் பாறைகளும் வெண்மணலும் தானே இருக்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
பயம், பதட்டம் இவற்றை தவிர்த்து யோசித்தால் எந்த ஒரு கடுமையான சிக்கலையும் நமது அறிவானது அவிழ்த்து விடும் வலிமை வாய்ந்தது.
அவள் மனதினை ஒருநிலை படுத்தி யோசித்தாள்.
அது அவர்களின் பயிற்சியின் ஓர் பகுதியும் கூட.
இப்படி தீவுகளில் மாட்டிக் கொண்டால் எப்படி உயிர் பிழைப்பது என்பது அவளுக்கும் அறிவுறுத்தப் பட்டிருந்தது.
என்றாலும் ஏட்டில் படிப்பது வேறு. அதையே அனுபவிப்பது வேறல்லவா.
உடலுக்கு உஷ்ணம் ஏற்ற வேண்டும். அதற்கு சிறிது உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் தாகம் எடுத்தால் பருக நீர் வேண்டும். அவளுக்கு அப்போது லேசாக பசித்தது.
உணவு உடை உறைவிடம் இது மூன்றும் தான் அத்தியாவசிய தேவை என்பது எத்தனை உண்மை.
யோசித்துக் கொண்டே இருந்தவள் தான் அமர்ந்திருந்த பாறையில் இருந்து கீழே இறங்க கால் வைக்க சற்று மறைவாக இருந்த பாறை கதகதப்பாக இருந்தது.
அவளுக்கு அன்று இரவு கழிக்க இடமும் கிட்டியது.
இரு பெரிய பாறைகளின் இடுக்கில் அவள் நுழையக் கூடிய அளவில் இருந்த இடைவெளியில் தனது உடலை குறுக்கிக் கொண்டு இறங்கினாள்.