தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 02 - சகி
அமெரிக்க மாகாணம்....
பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த காலைப் பொழுது...!மிக வெம்மையாகவும் அல்லாது,மென்மையாகவும் அல்லாமல் மிதமான சூரிய கிரணங்கள் அந்நகரை உயிர்பித்து கொண்டிருந்தன.அதிகம் இல்லாத குளிர்,வாட்டி வதைக்காத வெயில்,அவ்வப்பொழுது கன்னம் தீண்டும் தென்றல் காற்று,இமைக்க மறக்கும் சில நொடிகள்!!நியூயார்க்கின் அதிகாலை அடையாளங்கள்!!!தங்க நிற வளை அணிந்து,கருங்கூந்தல் காற்றில் சலசலக்க,கரத்தில் தூரிகையுடன் ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் அக்கன்னிகை.ஏதோ ஒரு மாபெரும் குறை இருக்க,அதை நிவர்த்தி செய்ய இயலாமல் பெருமூச்சு வாங்கினாள் அவள்.
"கடவுளே...!"மெல்லியதாக முனகியது அவள் குரல்.பாவம் எவ்வளவோ முயன்றுவிட்டாள்,அவளால் அந்த ஓவியத்தைப் பூர்த்தி செய்ய இயலவில்லை.என்ன ஓவியம் அது???அது ஒரு முகம்!!கண்கள் வரையாத,உயிரோட்டமில்லாத ஓவியம்!!!
"அக்கா!"-ஏதோ சிந்தனையில் இருந்தவளை,ஓடி வந்து அணைத்த தங்கையால் பதறிக்கொண்டு தூரிகையை சிதறவிட்டாள் அவள்.அவள்...மாயா!!!
"ஏன்கா இப்படி பயப்படுற?"
"உன்னை யாருடி இப்படி வந்து பயமுறுத்த சொன்னது?"பதற்றம் நீங்காமலே வினவினாள்.
"போக்கா!நீ சரியான தயிர்சாதம்!"
"என்னது?"
"போ!"என்றவளின் பார்வை அருகே இருந்த ஓவியத்தில் பதிந்தது.
"வாவ்!யாரிது?"
"ம்...இன்னும் கண்ணே திறக்கலை!இதுக்கு இவ்வளவு ஷாக்கா?"சுணக்கம் கொண்டாள் மாயா.
"அக்கா!யாருக்கா இது?"பிளந்த இதழை மூடாமல் கேட்டாள்.
"அது..."
"உன் கனவுல ஒருத்தன் வந்து என்னன்மோ பண்ணானே அவன் தானே!!"தங்கை பட்டென கேட்டுவிட,ஒரு நொடி சிலையாகி நின்றாள் மாயா.
"ஏ...!"
"சொல்லுக்கா!"
"ஸ்வேதா!நீ கிளாஸூக்கு கிளம்பு!"
"அப்போ அவன் தானே!!"
"இப்போ நீ போக போறீயா இல்லையா??"
"ம்...முறைக்காதே!போறேன்!கனவுல பார்த்ததுக்கே இப்படி,இன்னும் நிஜத்துல பார்த்தா அவ்வளவு தான் போலயே!!"
"ஏ...!"
"போயிட்டேன்!"-சிட்டாய் பறந்தாள் இளையவள்.
"கனவுல வந்து என்னன்னமோ பண்ணானே அவன்தானே!"அவள் மொழிகள் செவிகளில் எதிரொலித்தன.அதை நினைவு கூர்ந்தவளின் முகத்தில் உடனடியாக நாணம் படர்ந்தது.
என்ன செய்வாள்??அவன் முகம் தான் முழுதும் நினைவில் இல்லையே!!
அப்படியே நினைவிருப்பினும்,யாரவன்??எங்கிருப்பவன்??ஒரு நொடி அனைத்தும் மடமையென தோன்ற,அவள் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது.
"நான் ஏன் இதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிறேன்!ச்சே..!"-ஓவியத்தை ஒதுக்க நினைத்தவள்,மீண்டும் சிலையாகிப் போனாள்.
"ஆனா!இதை எப்படி முடிக்காம விடுறது?இதற்கான கண்கள் எப்படி இருக்கும்னு தெரிந்தால் முடிக்கலாம்!!"
"சரி....சரியான கண்கள் எப்போ ஞாபகம் வருதோ அப்போ முடிக்கிறேன்!"என்று தூரிகையை தூர வைத்தாள் மாயா.விழிகள் அற்று கிடந்தவன்,உண்மையில் விழியற்றவனோ??
1992ம் ஆண்டு...!
"என் பையன் ரொம்ப ஸ்மார்ட்! ஸ்கூல்ல அவன் தான் ஃப்ரஸ்ட் மார்க்!அவனை எல்லாரும் பெஸ்ட்னு சொல்லுவாங்க!"-அக்கம் பக்கமிருக்கும் நங்கைகளின் பெருமித குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
"என் பையன் கூட தான்!அவனை ஸ்போர்ட்ஸ்ல யாராலும் வின் பண்ணவே முடியாது!"சிலிர்த்துக் கொண்டாள் ஒருத்தி.தர்மாவின் நிலையோ பரிதாபம் தான்!!எங்கே அவன்???
"என்ன தர்மா?யாரை தேடுற?"-கர்வமாக ஒலித்தது ஒரு குரல்.
"ஆ...?பார்த்திபன் இன்னும் வீட்டுக்கே வரலை!"
"ம்கூம்..!உனக்கு உன் மகனை எப்படி வளர்க்கும்னு தெரியலை!படிப்பு,விளையாட்டு எதிலமே ஈடுபாடு இல்லை அவனுக்கு!என்ன பண்றது??அப்பா இருந்திருந்தா பரவாயில்லை!"-சுருக்கென்று தைத்தது அக்கூற்று.
"வேணும்னா!அவன் பெரியவனா ஆனதும்,என் மகனை வந்து பார்க்க சொல்லு!வாழ எதாவது வழி செய்வான்!"எள்ளி நகையாடி சென்றனர்.அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள்.
"மா!என்னம்மா அவங்க இப்படி பேசிட்டு போறாங்க!அமைதியா இருக்கீங்க?"-பொறுமை இழந்துக் கேட்டுவிட்டாள் துர்கா.அவளிடத்தில் பணிப்புரிபவள்!!