கவிதை சிறுகதை - வாசமிக்க வசந்த காலம் - ஷக்தி
நாம் வாழ்ந்த வாழ்வு,
அது வாசமிக்க வசந்த காலம்...
பள்ளி முடித்து கல்லூரி,
கனவு துறை எதுவென்று
தீர்மானிக்க திண்டாட்டம்..
பிடிப்பும் வெறுப்பும் இல்லாமல்,
நிகழ்வு விசைகளின் உந்துதலால்
எதிர்காலம் அறியாமல் நான்..
ரயில் பயண தோழியாய்,
அந்த உன் அறிமுகம், மணித்துளி போல
நிலையில்லையின என் எண்ணோட்டம்..
பூமிக்கு ஒரு ஆதவனாய்,
என் திசை அறியா பயணத்திற்கு
உன் கல்லூரி வருகை.
நமக்கான முதல் காதல்,
நம்மை அறியாமலே,
நம் இரண்டாம் சந்திப்பில்..
தயக்கத்தில் நம் மௌனம்…
சந்திப்பு எழுதப்பட்டது ஒரு
விதியோ அல்ல சதியோ.
உணர்ந்தோம், அது நமக்காக என்று..
இருந்தும் மோதலில் தொடங்கிய
நம் வாதம் மறவாத வேதமாய்
நம்மிடம் இன்றும் பொக்கிஷமாய்…
கனவுகளில் மட்டுமே மிதந்த
அந்த கல்லூரி நாட்கள்..
உன் வருகை என் விழிகளிலும்
என் பார்வை உன் புன்னகையிலும்
படம் பிடித்த நாட்கள்…
எதிர்பாராத உன் ஒரு நாள் விடுமுறையும்
எதிர்கொள்ள முடியாமல்
நிராகரித்த கல்லூரி நாட்களாய்…
சில விடுதி நபர்களின் தீய பழக்கவழக்கங்கள்
என்னை தொட துலங்கும் முன்னே
என் பாதையை மேம்படுத்திய வழிகாட்டியாய் நீயும்…
அந்த வாழ்வியல் மாற்றத்தோடு நானும்
பயணித்த நாட்கள்…
கல்லூரி நாட்களும் நகர
சுட்ட வாதங்கள் சுவையாக மாறி
ஒலித்தன காதல் ராகங்களாய்…
நடுத்தர உலகவியலில் நான்
மட்டும் என்ன விந்தையா…
தடங்கலில்லாமல் தடை அகற்ற.
தடுமாறி போனேன் வழக்கமாய்
சற்று வியப்போடு மூழ்கினேன்
வாழ்வின் சமன்பாடுகளில் தீர்வை நோக்கி…