மகளிர் தின சிறப்பு சிறுகதை - சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்! - ரவை
புகழ் பெற்ற கிரிக்கெட் வீரன் கிருஷ்ணசாமியின் வீடு!
கிருஷ்ணசாமி ஆடி, நாட்டுக்கு பல வெற்றி தேடித் தந்து, ஓய்வு பெற்றுவிட்டபோதிலும், அவர் வீடு முழுவதும், கிரிக்கெட் மட்டைகளும், பந்துகளும், கையுறைகளும், ஸ்டம்ப்களும் இறைந்து கிடக்கும், முதல் மாடியில்!
அங்கு நான்கு பக்கங்களிலும் உள்ள புகைப்படங்களில், கிருஷ்ணசாமி பெற்ற கோப்பைகளும் பாராட்டுவிழாவும் பட்டயங்களும் அவர் புகழைக் கூறும்!
இப்போதும் கிருஷ்ணசாமி கிரிக்கெட் வாரியத்துடன் பல விதங்களில் இணைந்துள்ளார்.
அவருக்கு ஆறு வயதில் ஒரு மகன், பெயர் கபில் தேவ்!
ஆச்சரியமாக இருக்கிறதா? கிருஷ்ணசாமிக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டக்காரன் கபில்தேவ்!
அதனால், தன் மகனுக்கு அவன் பெயரை சூட்டியதோடு ஆறு வயதிலிருந்தே சிறுவனை கிரிக்கெட் விளையாட பயிற்சி அளித்தார்.
கிருஷ்ணசாமியின் மனைவிக்கும் அதில் பெருமை! தங்கள் மகனை 'அண்டர் நைன்டீன்' நேஷனல் டீமில் எப்படியாவது சேர்த்துவிட்டால், அவனும் தந்தையைப் போல, புகழ் பெறுவதோடு, தந்தையின் காலத்தில் பெறமுடியாத கோடிக்கணக்கான ரூபாய் வருமானமும் பெறுவான் என்பது அவர்கள் ஆசை!
தான் சொல்லிக் கொடுப்பதைவிட, இன்றைய பயிற்சியாளர் எவராவது மகனுக்கு கற்பித்தால், மகனும் கட்டுப்பாடுடன் வளர்வான், திறமையும் வளரும் என ஆயிரக் கணக்கில் பணம் செலவழித்து ஏற்பாடு செய்திருந்தார்!
மகன் கபில்தேவுக்கு கிரிக்கெட் விளையாட்டில், சிறிதுகூட நாட்டமில்லை!
பெற்றோரின் வற்புறுத்தலுக்காக விருப்பமின்றி, பயிற்சிக்கு போய்வந்தான்.
கபில்தேவை, தினமும் பயிற்சிக்கு, மைதானத்துக்கு அழைத்துச் செல்வது, அவனுடைய அக்கா, பர்வதம்!
பர்வதம், பன்னிரண்டு வயது சிறுமி! அவளுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து, தந்தை கிருஷ்ணசாமி, மற்ற கிரிக்கெட் ஆட்டக்காரன்களுடன் அந்த விளையாட்டைப் பற்றி பேசுவதையெல்லாம், ஆர்வமாக கேட்டு ரசிப்பாள்.
தானும் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக மலர, கனவுகளை வளர்த்துக் கொண்டு, பொறுமையாக இருந்தாள்.
" அப்பா! தம்பிக்கு பயிற்சி அளிக்கவரிடம் என்னையும் சேர்த்து விடுங்கப்பா! எனக்கு ஆசையாயிருக்குப்பா, விளையாட! ப்ளீஸ்ப்பா!"